Wednesday, September 19, 2007

பிரிவின் செயல்..

தூக்கம் தொலைந்தது
தொண்டை வறண்டது
சொல்லும் சொல்
மறந்து போனது
இமை மறுத்த தூக்கம்
விரட்டியது யாரோ?
விடை தேடி விரைகின்றேன்
திசை தெரியாமல்.
மனதின் விஷம்
செயலில் கொடுமை
சொல்லில் கடுமை
செவியில் விழும்
அள்ள கைகள் இல்லை
அடைக்க பைகள் இல்லை
பயணம் முழுதும் பாரம்
நிழல் கிடைத்தால் இளைபாரும்
அந்த நிழலைத்தான் கண்கள் தேடும்
எந்த குழலும் கானம் பாடும்.
அது இந்த செவி
மடலில் சிதறிச் செல்லும்.
சுவாசிக்கும் காற்று
சுகமாய் தோன்றும்
உள்ளிழுத்த காற்று
குளிர்ந்து இருந்தது
வெளியிட்டது சூடாய் இருந்தது.
என் மனம் வழி வந்ததாலா?
பிரிவு மட்டும் அடிக்கடி
ஏன் வருகிறது.
பிரிவதால் என்ன பயன்?
உயிரற்ற உடலாய்
உலவவிட்டு உருகும்
உயிரை மறக்க வைக்கிறது
இதற்கும் விதியின் மீது
பழி போட விருப்பமில்லை.
என் மதியை நினைத்து
நானே நொந்து கொண்டேன்.
விழியில் சிறை வைத்தேன் உன்னை
கனவில் மட்டும் சிறை திறக்கிறாய்
இமை திறந்தால் நீ மறைகிறாய்.
உன்னிடம் நான் தொலைந்ததை
உணர்ந்தேன் இப்பிரிவால்.
தொலைந்த இடம் தெரிந்ததால்
தேடும் மனம் இல்லை என்னிடம்.
நினைவுகளால் உறக்கத்தை
உறங்கச் சொல்ல ஒத்தி வைக்கிறேன்.

வாடாத காகிதப் பூக்கள்.

உடலைப் படைத்து
உள்ளத்தை விலையாக
எடுத்து கொண்டான்.
படைத்ததை வைத்து
பிழைக்க வேண்டினான்.

மறுத்து பயனில்லை.
பிழைத்தாக வேண்டும்.
உழைத்தாக வேண்டும்.
சதை உண்டு
விதை இல்லை
வலி உண்டு
வழி இல்லை.
பழி உண்டு
பாவம் இல்லை.
சோறு உண்டு
சுகம் இல்லை

சிங்காரம் செய்வது சம்சாரிக்க.
சிரித்து குழைவது அவன் கவனிக்க.

உருவம் கொடுத்து
பருவம் கொடுத்து
மனம் கெடுத்து
தானம் செய்து
வாழ்வு வாழ
இந்த உடலை தந்தான்.

சூழ் நிலை கைதியாய்
சுகம் கொடுக்கும் இயந்திரமாய்
சுரக்கும் இந்த பாத்திரம்.
பொருள்களின் விலை எப்போது ஏறும்
இவர்களின் நிலை ஏப்போது மாறும்?

பருவம் இவர்களின் கருவம்
உருவம் பாறினால் அதுவே பாரம்.
வயிற்றை கழுவ வலியயை
பொறுக்க வேண்டும்.
மஞ்சள் கயிற்றைக் கொடுக்க
சிலர் வர வேண்டும்.

சிலையாய் சிங்காரித்தால்தான்
சிலர் வருவார்கள்.
தன் குடும்பம் என்றொரு
உலகம் பார்க்க மனதில்
ஒரு ஏக்கம் உண்டு
வாழ்கையே ஒரு கானல் நீரா?
அல்லது வறண்டு போன ஆற்று நீரா?

என்ற கேள்வி என்றும்
உள்ளத்தில் உண்டு.
இவர்கள் சுரண்ட சுரண்ட
சுரக்கும் இன்ப சுரங்கம்.
தன் நலம் இல்லா குணம்
தன் வலி பொறுத்து
வருபவர் இன்புற வாழ்பவர்கள்.
சட்டம் ஒடுக்கும்
சமுதாயம் பழிக்கும்
ஆனாலும் சத்தமில்லாமல்
வாழ்கை தொடரத்தான் வேண்டும்.
சளைத்தாலும் சலித்தாலும்
இழுத்தவர் பக்கம்
சாயத்தான் வேண்டும்.

பணம் உண்டு அவனிடம்
சுகம் உண்டு இவளிடம்.
வந்தவன் வலி கொடுப்பான்
வஞ்சியவள் வலி பொறுப்பாள்.
வாழ்கை வலியும்
தேக வலியும்
பழக்கம் கொண்டாள்.
வாடாதது வாடக்கூடாதது
இந்த வாடகை மலர்கள்.
வாடினால் வாழ்கையேது?
வாடகை சந்தோஷம்
வழங்கும் விருப்பமில்லா மகிழ்ச்சி
வழங்குமோர் நிகழ்ச்சி.

வாலிபப் பசியாற வருவோர்
இங்கு ஆயிரம்.
பருவம் இருக்கும் வரை வழங்கும்
இன்பம் யாரிடம்?
முகவரி இல்லா முகத்திற்கு
முந்தானை விரித்து
முகம் சுளிக்காமல் முனகி
கரையும் தேகம் இளகி
மெழுகாய் உருகி
மனப்பூவும் கருகி
பழகிப் போன ஒன்று.


விடியலுக்காக விடியும்
வரை உழைத்து
விடிந்து வெளிச்சம்
காணாமல் தவித்து
தொடரும் ஒரு வாழ்கை.
ஆசை என்பதன்
அர்த்தம் அறியாமல்
வேஷம் போட்டு
பாசம் காட்ட
காசும் வரும்
நேசம் இல்லா
வாழும் வாழ்வு.
காசுக்கு கடை விரித்தாள்
கனவுக்கு விடை கொடுத்தாள்.
கல்லினால் மலர் பிம்பம்
செதுக்கிக் கொண்டாள்
அதயே தன் மனம்
என்று கொண்டாள்.

காகிதப் பூக்கள் வாசம் வருட
வாழும் பூக்கள்
ஒரு பூ பணத்தை கண்டால்
படுக்கையில் மலரும் இந்த பூ

சாத்திரம் தேவையில்லை
கோத்திரம் பார்ப்பதில்லை
தாரம் தரவில்லையெனில்
தருவாள் இவள் மேனி
சுகம் பொருளுக்கிணையாக.

அலங்காரம் செய்வது
அவசியம் கலைவதற்கு
மோகத்தீயில் மெழுகாய் உருகுவர்
இங்கு வந்து குளிர் காய்வர்.

மோகத்தில் மோட்சம் அடைவது
இவர்களிடத்தில்தான்.
நாலு சுவருக்குள் ஓர் உலகம்
துணைகள் மாறும் தனி உலகம்.
சதையுடன் சந்தைக்கு வந்ததால்
சிதையானது இவர்கள் வாழ்வு.

சிகப்பு விளக்கு எரியவிட்டு
செயற்கை சிரிப்பை உதட்டில் விட்டு
சில நொடிக்காக சிங்காரம் செய்து
சின்ன சினுங்கல் தவறாமல் செய்து
தூண்டிலிட்டு மீன் சிக்க காத்திருந்து.

சிக்கிய மீனுக்கு
சிலாகித்து கொள்ள வேண்டும்.
அரிதார்ம் பூசி
ஆளை மயக்குவதும்
ஒரு கலைதான்.
தேகம் வளர்க்க
சுகயாகம் செய்பவர்கள்.
பூவுலகில் வந்து விட்டோம்.
வாழும் வரை
வாழ்ந்து பார்த்திடுவோம்
என்று வாழ்பவர்கள்.
கயிற்றையும் விஷத்தையும்
முத்தமிட்டு தன் வாழ்வை
முடித்துக் கொள்ளும்
கோமளிகளின் முன்
வாழ்வே விஷமானலும்
ஓர் விடியலுக்காக
உருகும் மொழுகுவர்த்திகள்.

Thursday, September 6, 2007

ஆத்திச்சூடி பிழை..?

கருவில் தோன்றி
உருவம் பெற்று
என் இனத்தவராலே
இரக்கப்பட்டு
தரையில் கிடத்தப்பட்டேன்.

உடல் உறுப்பின் மாற்றத்தினால்
சிலரால் வெறுக்கப்பட்டேன்.
சூடான சுவாசக்காற்று
என் மேல் பட்டு
உடல் சிணுங்கி
கண் விழித்தேன்
எனக்கு நெருக்கமான வாசம்.
எனக்கு உதிரம் கொடுத்து
உருவாக்கிய வாசம்.

சற்று கிழே பார்க்கிறேன்
உடலை வளர்க்கும்
உணவு உட்கொள்ள உதவும்
குழாயை காணவில்லை
என் வயிற்றில்
கொடி இருந்த இடத்தில்
முடி இருந்தது செந்நிறத்தில்.

நாவின் வேலை ஆரம்பமானது
உணவு உள்ளே செல்ல இதுதான் வழி.
செவியின் வழி ஒலி வந்தது
பெண்ணா’ என்ற சொல் வந்தது
அதுதான் நான் கேட்ட முதல் சொல்
எனக்கு பாலூட்டினாள்
அப்போதுதான் தெரிந்தது
அவள் என் தாய் என்று
தந்தை எனை பார்க்க வரவில்லை
தடை போட்டது அவர் தாய்.
என் பாட்டி.

வாரம் இரண்டு சென்றது
வருவார் என்று
வழி மேல் விழி வைத்தாள் என் தாய்.
வந்தார் அவரும் அவளை பார்க்க
இருட்ட தொடங்கியது இரவு தங்கினார்

என் அழுகை சத்தம்
போனது வீட்டார் உறக்கம்
என் அப்பா கோபம்
போனார் அவர் வீட்டோடு
என் தாயுடன் நானும் தங்கினேன்

நாள் குறித்து நால்வருடன் வந்து
ஊர் அறிய கூட்டிச் சென்றார்
என் அப்பா எங்களை ஓர் நாள்

பாட்டியின் சோகம் நான் பெண் ஆனது
அம்மாவின் சோகம் நான் ஆணாக பிறக்கவில்லை என்று
அப்பாவின் கோபம் என் அழுகையின் மேல்
அட! ஏன் இந்த கசப்பு?
முக்குக்கொருவர் முகத்தை வைத்து கொண்டா
இந்த வரவேற்பெனக்கு?
என்னாலா இந்த பிணக்கு?
புரியவில்லை இவர்கள் கணக்கு.!
சத்தம் கேட்கும் திசையைப் பார்ப்பேன்
சிலர் முகத்தருகில் வந்து முழியை பார்ப்பர்
முத்தம் கொடுக்க.

நீரை ஆகாரமாய் உண்ட நான்
சோறை ஆகாரமாய் உணகிறேன்
பள்ளி செல்லும் வயதடைந்தேன்
பள்ளி சென்றேன் படித்தேன் நானும்
ஓட்டப் பந்தயம் சேர ஆசை.!
தாயிடம் சொன்னேன் அவள் தந்தோ வசை.!
பட்டுப் பாவாடை கொடுத்தார்கள்
உடுத்திக்கொண்டேன்.

என் உடலில் சிற்ச்சில மாற்றங்கள்.
தாயின் அரவணைப்பு அதிகம் தேவைப்பட்டது.
பாவாடை தாவணியாக மாறியது என் உடை.
பள்ளி முடித்து கல்லூரி அடி வைத்தேன்.
ஆணிடம் பேச தடை.
விடுதி என்பதே எங்களுக்கு சிறை.
சிலரின் பார்வைகளால்
எங்கள் உடையை சரிபார்க்க வேண்டியிருந்தது.
பெண்ணீயம் பேசும்
பித்தர்கள் எல்லாம்
சித்தர்களாகவே தெரிந்தார்கள்.

பட்டம் வாங்கும் முன்
திட்டம் போட்டார்கள்
வீட்டிலுள்ளவர்கள்.
திருமணம் என்று சொல்லி
என் மனவிருப்பம் கேட்க்கவில்லை.
அவர் மனம் மகிழும் ஆடவனை
மாப்பிள்ளை என்றார்கள்.
வீடு என்பதே சிறையா?
விரும்பிப்போகும் அறையா?
பறவை நான் ஒரு கூட்டிலுருந்து
மறு கூடு வந்தேன்.

என்னவன் என்று
அவனுடன் போனேன்.
புது வீடு புது உலகம்
புது மனிதர்கள்
புது பழக்கம்.
எல்லாம் கற்றேன்.
இளமை நினைவுகள்
இனிமையாக தொடர்ந்தன.
என்னவரின் அன்னை உட்பட
பெரும்பாலனவர்கள் சொன்னார்கள்
பையனை பெத்து கொடுமா’ என்று.
அப்போது புரிந்தது
அரிது அரிது மானிடராய் (பெரிய-நீ-இடர்) பிறத்தல் அரிது’ என்று.
ஒளவையின் சொற் பிழையை திருத்தலானேன்
இப்படி ‘அரிது அரிது மாதாராய் பிறத்தல் அரிது’ என்று.

Wednesday, August 22, 2007

நம் குழந்தைகளுக்கு..

பள்ளி போய் வா
படித்து அறிந்து வா
உழைக்க கத்துக்கோ
வரும் உலகம் உனக்குத்தான்.
பிழைக்க தெரிஞ்சிக்கோ
எல்லாரிடமும் பழக தெரிஞ்சிக்கோ

கல்வி என்றும்தான் கற்க வேணுமே
ஆளும் நீயும்தான் வளர வேணுமே
உன் அறிவும் நாளும்தான் சிறக்க வேணுமே
அன்பை பேதமின்றி நீ காட்ட வேணுமே

யாரையும் ஏளனம் எப்பவும் செய்யாதே
நீயும் என்றும் ஏளனப் பொருள் ஆகாதே
முயற்சியுடன் எந்த காரியமும் முனைந்து செய்யனும்
தளர்ச்சி இல்லாம அதையும் பார்த்து செய்யனும்

இளம் காலையில் கண் முழிச்சிடு.
இந்த நாளும் நமதே என்று நீ நினைச்சிடு
பல்லை நீயே துலக்கிடு
பாலை நீயும் குடிச்சிடு
காலை கடனை முடித்திடு
கொஞ்ச நேரம் உடற்பயிற்சி செஞ்சிடு
குளித்து நீயும் வந்திடு
கடவுளை நாளும் கும்பிடு
தினமும் நீயும் நினைச்சிடு

அம்மா செய்த சிற்றுண்டி
அழகாய் நீயும் சாப்பிடு
பள்ளீச் சீருடை போட்டுக்கோ
பையை தோளில் மாட்டிக்கோ
தாத்தா பாட்டிக்கு
டாடா பைபை சொல்லிக்கோ
அம்மா கையை புடிச்சிக்கோ
பள்ளிச் சாலை நோக்கி நடந்துக்கோ
ஆசான் வகுப்புக்கு வருவாரு
பாடம் சொல்லி தருவாரு

பயமில்லாம கத்துக்கோ
பக்குவமாய் பார்த்து தெரிஞ்சுக்கோ
புரியாததை கேட்டுக்கோ
புரியாதவர்க்கு உதவிடு
புதுமை நீயும் புரிந்திடு
மதியம் உணவு சாப்பிடு
தண்ணீர் நீயும் குடிச்சிடு
மாலை வீடு திரும்பிடு
உடையை நீயும் மாற்றிடு
கைகால் கழுவிடு

பெரியவங்க சொல்றதை கேட்டிடு
ஓடி ஆடி விளையாடு
உட்கார்ந்து மட்டும் இருக்காதே
இருட்டும் முன் வீட்டில் இருந்திடு
வீட்டுப் பாடம் முடித்திடு
இரவு உணவை உண்டிடு
கடவுளுக்கு நன்றி சொல்லிடு
கட்டிலில் படுத்து உறங்கிடு

பள்ளி போட்டிகளில் பங்கெடுத்துக்கோ
நண்பன் பரிசு வாங்கினா கை குலுக்கிக்கோ
நீ பரிசு வாங்க கை கோர்த்துக்கோ
நெஞ்சில் துணிவு வைத்திடு
நேசமாய் பழக கற்றிடு
பன்மொழி பாலனாய் மாறிடு
உன் தாய் மொழி என்றும் நினைத்திடு.

தெய்வம் பல உண்டு நாட்டிலே
எல்லாம் ஒன்று என தெரிஞ்சிக்கோ
மதங்கள் சில இருந்தாலும்
மனித நேயம் என்றும் மறக்காதே

உன் புன்னகையால்
இவ்வுலகை வென்றிடு
நல்ல முன் உதாரணமாய் இருந்திடு
முயன்று முன்னால் சென்றிடு
தோல்வி என்று துவளாதே
வெற்றி களிப்பில் குதிக்காதே
இரண்டும் சமமாய் ஏற்றிடு
வாழ்வில் சாதனை செஞ்சிடு
உலகம் உனது பாக்கெட்டிலே
நாமும் போகலாம் ராக்கெட்டிலே

அன்பு அறிவு
பணிவு துணிவு
தெளிவு பொலிவு
ஆக்கம் ஊக்கம்
உண்மை மென்மை
முயற்சி உயர்ச்சி
எல்லாம் உனக்கு
என்றும் கடவுள் அருள்வாரே.

கண்ணதாசன் கவிதை

பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்
பிறந்து பாரென இறைவன் பணித்தான்!
படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
படித்துப் பாரென இறைவன் பணித்தான்!
அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
அறிந்து பாரென இறைவன் பணித்தான்!
அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன்
அளித்துப் பாரென இறைவன் பணித்தான்!
பாசம் என்பது யாதெனக் கேட்டேன்
பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்
மணந்து பாரென இறைவன் பணித்தான்!
பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்
பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்!
முதுமை என்பது யாதெனக் கேட்டேன்
முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
வறுமை என்பது என்னெனக் கேட்டேன்
வாடிப் பாரென இறைவன் பணித்தான்!
இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்
இறந்து பாரென இறைவன் பணித்தான்!
'அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்
ஆண்டவனே நீ ஏன்' எனக் கேட்டேன்!
ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி
'அனுபவம் என்பதே நான்தான்' என்றான்!


இந்த கவிதை இன்னொரு வலைப்பதிவிலிருந்து 'சுட்டது'.
இந்த கவிதையில் உள்ளது எல்லாம் உண்மை வரிகள் என்று எனக்கு பட்டது.

Wednesday, August 15, 2007

பாரதத் தாய்

பாதம் பணிந்தவர் பயனுற்றனர்
வாதம் செய்தவர் பிரிவுற்றனர்.
பாவம் என்றெண்ணியவர் பிரம்மிப்படைந்தனர்
கோபம் கொண்டவர் மோசம் போயினர்.

விலங்கு கைகளை இறுக்க
உரிமை அதனை உடைக்க
கொட்டும் குருதியில் குளித்து
வாழும் உயிர்களை ஏப்பம் விட்டு
வாங்கிய சுதந்திரம்
வாழ்கை என்றும் மறவாது
உன் மந்திரம்

சுரண்டும் சுப்பன்கள்
சுகமாய் இருந்தாலும்
சுரக்கும் உன் கருணை
சுத்தமானதுதான்.

எத்தனை உறிஞ்சினாலும்
ஊரும் நீரூற்று உந்தனுடையது
ஜாதி நோய் கொண்டு
பாதி உயிர் போயினும்
சாதித்து நின்றாய் நீ
கொலை வெறி தீவிரவாதியும்
உன்னை கீரி கொப்பளிக்கும்
ரத்தம் கண்டு குதூகலித்தாலும்
குணத்துடன் உன் சோகம் மறைத்தாய்
கூடி நின்று அமைதி காத்தாய்

ஒன்றாய் இருப்பதை கண்டு
மனம் வேகும் மாந்தர் தம்மை
வேரோடு மாற்றுவோம்.
இவள் ஒன்று பட்ட
சக்தியை கூட்டுவோம்.

மனித வளத்தின்
மகிமையை
அவனி அறிய
வைத்தாய் நீ
வானம் வளர
வாழ வைத்தாய் நீ
மானம் ஊட்டி
கானம் பாடி
நாளும் நன்மை செய்து
வாழும் மனிதரை கொண்டாய் நீ.

அறிவியல் அதிசயமும்
புவியியல் பூகம்பமும்
நடப்பது உன்னில்தான்.
ஆழிப்பேரலையும் உன்னை
தோழி போல் முத்தமிட்டு
பல உயிர்களை
புசித்து ருசித்தது
உன்னிடத்தில்.

யாருக்கும் இல்லை
என்று சொல்லும்
மனம் இல்லாமல்
அனைவருக்கும்
கிள்ளி கொடுக்காமல்
அள்ளி கொடுப்பவள் நீ
அதையும் சொல்லி
கொடுப்பவள் நீ.
விதையை விருட்சம்
ஆக்குபவளும் நீயே.

தவசீலர்கள் உன்னில் ஜெனித்து
சமுதாய மாற்றம் கண்டு
உள்ள ஏற்றம் கொண்டு
வாழ்வாங்கு வாழ வாழ்த்துவாய்
நீயும் வாழுவாய்.

நிலம் கொண்டு
நீர் கொண்டு
வளம் கொண்டு
பயிர் கொண்டு
வனம் கொண்டு
மனம் கொண்டு
குணம் கொண்டு
செல்வம் கொண்டு
எழில் கொண்ட
எங்கள் தாயே
எங்களை வாழ வைத்தாயே
எங்களை இந்தியர்
என்று சொல்லி
பெருமை பட வைத்தாயே
உன் அடி பணிந்து
உயருவோம் என்றும்.

Tuesday, August 14, 2007

பிறந்த ராசிக்கு ராசியான ஸ்தலம் எது?

நாம் எத்தனையோ கோவில்களுக்கும், வழிபாட்டு தலங்களுக்கும் செல்கிறோம். என்றாலும் கூட நமது ராசிக்கு ஏற்ற ஸ்தலம் எது என தெரிந்து கொண்டு அதற்கேற்ப வழிபட்டு வருவோமானால் நம் வாழ்வு இன்னும் சிறப்பாக அமையும்.


இதோ ஒவ்வொரு ராசிக்காரர்களும் செல்ல வேண்டிய ஸ்தலங்களின் விபரம் பின்வருமாறு:

ராசி - ஸ்தலம்

மேஷம் - ராமேஸ்வரம் ராமநாதர்
ரிஷபம் - மேல் திருப்பதி வெஙகடேச பெருமாள்
மிதுனம் - திருவெண்காட்டில் புதன் சன்னதி
கடகம் - சிதம்பரம் நடராஜர் கோவிலில் சிவகாம சுந்தரி சன்னதி எதிரே உள்ள நவலிங்கம்
சிம்மம் - நன்னிலம் அருகில் ஸ்ரீவாஞ்சியம் என்ற ஊரில் உள்ள மங்களாம்பிகை
கன்னி - திருக்கழுக்குன்றம் மலை மேல் வேதகிரீஸ்வரர்
துலாம் - திருத்தணி முருகன்
விருச்சிகம் - காஞ்சிபுரம் காமாட்சி அம்மனை பவுர்ணமியில் வழிபடுதல்
தனுசு - ராமநாதபுரம் அருகில் தேவிபட்டணத்தில் கடலில் உள்ள நவக்கிரகம்(நவபாஷாணம்)
மகரம் - காசியில் உள்ள விஸ்வநாதர்
கும்பம் - கும்பகோணத்தில் கும்பேஸ்வரர்
மீனம் - மதுரை மீனாட்சி கோவிலில் உள்ள சொக்கநாதர் மற்றும் மீனாட்சி.

குறிப்பு:-
நம்மக்கு தெரிஞ்சத சொல்லிட்டேன்.. அதுக்காக என் ராசிக்கேத்த சாமி இங்க இல்லன்னு கோவிலுக்கு போய் கும்பிடாம வந்துடாதீங்க..

தனிமை..

தனிமை .. ஒரு வரம், ஒரு சாபம், ஒரு கொடுமை, ஒரு மென்மை, ஒரு இனிமை, ஒரு குற்றம், ஒரு திறமை, ஒரு தவம், ஒரு மேன்மை, ஒரு வறுமை, ஒரு செயல், ஒரு உண்மை, ஒரு கவிதை, ஒரு அருள், ஒரு ஆற்றல், ஒரு பாடல், ஒரு ஒழுக்கம், ஒரு அனுபவம், ஒரு ராகம், ஒரு குடும்பம். தனிமையில் இனிமை காண்பது அவரவர் மனதிலு வாழ்கையிலும்தான் அடங்கியுள்ளது. பலர் இந்த உலகில் தனிமைக்கு ஏங்குகிறார்கள் - அது சாபம். சிலருக்கு அது கிட்டுகிறது - அது வரம், ஆண்டவன் அருள். சிலருக்கு அதுவே ஒரு கொடுமை. சிலர் அதை ஒரு தவமாகவே செய்கின்றனர். அது அவர் செயல் ஒழுக்கத்தை உரசிப் பார்க்கும் ஓர் உரைகல். நண்பர்கள். பகைவர்கள், உறவினர், சுற்றத்தார் யாரும் இல்லா ஒரு வறுமை சூழலை ஏற்படுத்தும் தனிமை. தனிமையை ஒரு கவிதையாக்கி, ராகமாக்கி, பாடலாக்கி பாடுபவர்களும் உண்டு. அதுவே அவர்களின் ஆற்றல். ஒரு குடும்பம் தனிமை படுத்தப்பட்டால் அது ஒரு குற்றம். அது அவர்களுக்கு விதித்த அல்லது அவர்களாகவே ஏற்படுத்திக் கொண்ட ஒரு செயல். தனிமை நமக்கு நாமே பேசக் கற்று கொடுக்கிறது. ஆண்டவனிடன் நெருக்கமாக பேச செய்கிறது. நம்மை நமக்கு அடையாளம் காட்டுவது தனிமை. தனிமை ஒரு மென்மையான அனுபவம். அதை ரசிக்க ருசிக்க கற்றுக் கொள்வது கொஞ்சம் கடினமே. கவிஞன் கவிதை வடிப்பதும் தனிமையில்தான். கட்டுரையாளன் கட்டுரை வரைவதும் தனிமையில்தான் ஓவியன் வண்ணம் தீட்டுவதும் தனிமையில்தான். இன்றைய உலகச் சூழலில் தனிமை ஓர் அருமருந்து. அதை உணவாக்க முடியாது. நம் வாழ்வை மேன்மை பெற தனிமையில் நம்மை ஊக்க படுத்திக் கொள்ளலாம். உடல் மற்றும் மன ரீதியாக பல மற்றங்களை கொண்டு வரும் தனிமை. மனம் விட்டு மற்றவறோடு பேசும்போது தனிமையை தனிமை படுத்துகிறோம். தனிமையிலேயே உழலாமல் தனித்தன்மையோடு வாழ்வின் வளமையை உணர்ந்து உலகை வென்று உன்னதம் காண்போம் இறைவன் துணையுடன் நம் உள்ளத்துணிவுடன்.

வலி..

வலிகள் எத்தனையோ வகை. புறவலி அகவலி என இரண்டு உள்ளது. புறவலிகள் வடுவாகி தோற்றத்தை மாற்றி நடந்த சம்பவத்தை நினைவு கூறும். அகவலிகளோ உள்ளத்தில் உறைந்து உளவியல் வினைகளை செய்யும். பொதுவாக இரண்டும் நம் நினைவை சலவை செய்பவை வலியை பார்க்க முடியாது உணரத்தான் முடியும். பிறக்கும் போது நம் அன்னைக்கு தருவது புறவலி. மருந்துடன் மருத்துவர் ஊசியோடு வரும்போது மறைந்து கொள்ளும் குழந்தைகள் அச்சம் கொள்வதும் புறவலியால். குழந்தை புறவலியால் துடித்தால் அன்னை அகவலியால் துடிப்பாள். சில நேரம் வலி வந்தால் வழி பிறக்கும். வலியுடன் வாழ்கை நடத்தும் வறியவர்களுக்கு சில நேரம் வழி பிறக்கும். வாளின் வலியை விட சொல்லின் வலி ஆழமானது. சொல்லில் முள் வைத்து பேசுபவர்களின் பேச்சு செவி வழி நெஞ்சை தைக்கிறது. சில நேரம் வதைக்கிறது. அதுவே பல நேரங்களில் நமக்கு வாழ கற்றுக் கொடுக்கிறது. தலைவலிக்கு மருந்துண்டு மனவலிக்கு மருந்தில்லை. இளவயதில் சிலருக்கு வரும் காதல் வலி சிலருக்கு அவ்வலியே சுகம். நம் பாதையில் முள் குத்தினால் வலி. வலியின் ஓசை வாய் மூலம் வரும். வலியின் வெளிப்பாடு கண் மூலம் வரும். கண்ணீராய் வரும். வலி கற்றுத்தரும் பாடம் அதிகம். வாழ்க்கையில் நாம் காணும் வலிக்கு நாமே விலை நிர்ணைக்கிறோம். அந்த விலையின் ஒரு பகுதிதான் காலம். அந்த வலி நம்மை மட்டும் அல்ல நம்மை சார்ந்தவரையும் சில நேரம் பதம் பார்க்கும். அதனால் நாம் வலுவிழக்காமல் வலிமையடைய வேண்டுமே தவிர வருத்தப் படக்கூடாது. பிணியின் வலி கொடியது. வலி விலக்கு யாருக்கும் நிரந்திரம் அல்ல. வலி அறிந்தவன் வழி அறிவான். வாழ்வறிவான். ஆசை அறுத்து வலியை களைவோம். வலியைத் தாங்க இறைவன் துணையுடன் மன உறுதியும் இருந்தால் வலி வரும் வழி மறக்கும். பிறர் படும் வலி நம்மை தாக்காது பார்த்து கேட்டு அறிந்து நடந்து வாழ்வதே அறிவுடையோர் செயல்.

மரம் பா(ட்)டு

வானம் நோக்கி வளர்ந்தேன்
வளம் பெருக்கிக் கிடந்தேன்
சூரிய கதிர் கொத்தி தின்பேன்
அதன் ஒளி விழுங்கி தழைத்தேன்
ஓயாமல் ஓடும் ஜீவன்களுக்கு
ஓய்வென்று ஒதுங்குவது
என் நிழலில்தான்

மனிதக் காற்றை
அதிகம் சுவாசிப்பதால்
நானும் மனிதர்
போல பேசுகிறேனா?
இனி என்னை பற்றி அல்ல
எங்களைப் பற்றி

மனிதரை மனிதர் திட்டிக்கொள்வர்
எங்கள் குல உவமையோடு
'மரம் போல் நிற்கிறாய்' என்று
இன்று வரை புரியாதது என்னவென்றால்
நாங்கள் நின்று கொண்டிருக்கிறோமா?
அல்லது உட்கார்ந்து கொண்டிருக்கிறோமா?
புரியாத புதிர்..!

உலவும் பலருக்கு
அலுக்கும் அவர் பணி
எங்களைப் போல்
ஓர் இடத்தில் இருப்பதாய்
உங்களை நினைத்துப் பார்த்தால்
சிரிப்புதான் வருது

காற்றடித்தால் நாங்கள் அசைவோம்
கனி கனிந்தால் நாங்கள் உதிர்ப்போம்
வேர்கள் கொண்டு வேகம் நீரை உறிஞ்சுவோம்
பச்சை இலை செழிக்க
பருகி பலம் சேர்ப்போம்

தவம் புரிவோரும்
எங்களைப் பாரத்துதான்
தன் உடல் நகர்த்தாமல்
வானவர் நோக்கி பலன் கண்டனர்

எங்கள் தொழில் தவத் தொழில்
பிறருக்கு இன்னா செய்யாமல் உதவும் தொழில்

காய் வேறு
கனி வேறு
களம் வேறு
கிளை வேறு
நிலம் வேறு
நீர் வேறு
நிறம் வேறு
பலம் வேறு
இலை வேறு
சுவை வேறு
நிலை வேறு
ஆனால் குணம் ஒன்றுதான்
மனம் ஒன்றுதான்
நிழல் ஒன்றுதான்
தொழில் ஒன்றுதான்

எங்கள் கிளையில்
பறவைகள் பலவும் உட்காரும்.
ஊரும் உருவங்கள்
எங்கள் சிரமேறும்
ஆனாலும் நாங்கள் நகர்ந்ததில்லை
பழத்தை வைத்து
எங்களை பல பெயர்
வைத்து அழைப்பர்
கூட்டுக் குடும்பமாய்
கூடி இருப்போம் காடுகளாய்

அளவில்லா நெருப்பாலும்
நீராலும் பிளவு ஏற்பட்டாலும்
நாங்கள் மறுபடி முளைப்போம்
ஒன்றாக சிறு சிறு கன்றாக
இயற்கை சீற்றம்
இல்லை ஏமாற்றம்
எங்கள் பலன் அறிந்த மனிதர்
வந்து வெட்டுவதுதான்
எங்கள் மன வருத்தம்
குருதி கொட்டினாலும்
கூக்குரலிட தெரியவில்லை.
பகுதி எடுத்தாலும்
பச்சை மனம் மாறுவதில்லை.
மேனியை தோலுறித்து
நரம்பை நாருறித்து
அடி வேரறுத்து
சென்றாலும் விரும்பி
அரும்புவோம் வேரோர் இடத்தில்.

வானம் பொய்த்து
மேகம் மறுத்தாலும்
சோம்பி சூம்பமாட்டோம்
மழை தூரல் போட்டவுடன்
துளிர் வேலை ஆரம்பிப்போம்
பச்சை வண்ணம் காட்டி
பழுத்தவை பாதம் சேர்த்து
ஊரார் உரம் என அள்ளிச் செல்வர்
எங்கள் உடல் பகுதி
வெட்டினாலும் உங்கள்
உடல் அசதிக்கு உறங்க
வருவது எங்கள் பாதத்தில்தான்.
வெய்யில் பார்த்தவர்
எங்கள் நிழலில் நிற்பர்.

நல்ல வேளை நகரும் வரம்
இறைவன் எங்களுக்கு தரவில்லை.
சொந்த மண் அடையாளமாக
சொல்லாமல் நிற்போம்
என்றும் ஓர் இடத்தில்.

தன் இனத்தவரை
தாங்களே வெட்டிச்
சாய்க்கும் அவலம்
எங்கள் குலத்தில் இல்லை.

பள்ளம் இல்லா உள்ளம்
கொடுத்த இறைவன்
எங்களை நிலம் நிறுத்தி
சிறை செய்தது ஏனோ?
என்ன பிழை செய்தோமோ?

நகரம் படைத்த நீங்கள்
எங்களை நகர்த்தி துரத்திவிட்டீர்கள்.
தொழிற்சாலை தொடங்குவதாக்
தூக்கி விட்டீர்கள்.
அட அதற்காகவாவது எங்களுக்கு
நகரும் சக்தி கொடுத்திருக்கலாம்..!

பூமியின் உயிர் நாங்கள்
மயிர் என நீங்கள் நினைத்தால்
உங்களுக்கு மரை கழண்டு
விட்டதாக நாங்கள் நினைப்போம்

கிளை நீளும் கரங்களாக்
நிழல் தரும் மரங்களாக
மனம் கொண்டு நிற்போம்
வேகாத வெய்யிலில் வெந்து
சூராவளி காற்றில் சூழன்று
கொட்டும் மழையில் நனைந்து
வறண்ட பூமி வெடிப்பு பூமியாக இருந்தும்
கரை புரண்டு
புது வெள்ளம் புகுந்தாலும்
புகழோடு உறுதியாய் நிற்போம் பூமியில்
பூமித்தாயின் நரம்புகளாய்
படர்ந்த எங்கள் வேர்கள்
எங்களை நிறுத்தும் நிலையாக
யாரைத்தேடி நாங்கள் போக?
நச்சுக் காற்றை மாசறுத்து
சுவாசிக்கும் காற்றாய் தருகிறோம்.

உதிர்ந்து முறிந்து
முறித்து நெருப்பு எரிக்க
எடுத்து செல்கிறீர்கள்
எங்கள் தேகங்களை.
வெந்த தேகக் கட்டை கரிகளாய்
சாம்பலாய் சாகும் வரை
உங்களுக்காக இருக்கிறோம்.

நாங்கள் தழைத்தால்
நாடு செழிக்கும்
நாங்கள் உழைத்தால்
நீங்கள் பிழைக்க முடியும்.
கரும் புகையிலிருந்து
நீங்கள் தப்பிக்க சுய நலத்துடன்
ஒரு பொது நல வேண்டுகோள்
எங்களை வாழவிட்டு
நீங்களும் வாழுங்கள்
வளமாக மற்றும் நலமாக.

கடவுளின் கர்வம் - குழந்தைகள்

ஆசை யாரை விட்டது?
கடவுளின் ஆசை
கருவில் தொடங்கியது
தானே எல்லாம் என இருந்தும்
தன்க்கென்று ஓர் தாய் மடி கேட்கிறான்

நமக்கு புரியாத
மொழியில் பேசும் குழந்தை
அது தேவ மொழி
அங்குள்ள ரகசியத்தை
இங்கு சொல்ல துடிக்கிறது
பாவம் குழந்தைக்கு தெரியாது
அந்த மொழி இங்கு
யாருக்கும் தெரியாதது என்று

இயற்கையின் படைப்பில்
இறைவனின் பரிசு குழந்தைகள்
மழலைச் சொல்லின் ராகம்
மயங்கும் யாவர் நெஞ்சம்
மறக்கும் மனதில் வஞ்சம்
கள்ளம் ஒன்றும் இல்லை
கவலை என்றும் இல்லை
மொட்டுப் போல் உதடு
அது சிரிக்கும் போது
பூக்கும் பூக்கள்
பிஞ்சு விரல்கள்
கொஞ்சும் மொழிகள்

பிறக்கும் குழந்தையின்
மனமும் வெள்ளை
பருகும் பாலும் வெள்ளை
தன் பசியின் சத்தம்
தாயை அழைக்கும்
கோபம் பழிக்கும்
கொண்டவரை மகிழ்விக்கும்
சோகம் மறக்கும்
சொர்க்கம் கிடைக்கும்
சொன்னால் புரியாத
சந்தோஷம் சூழும் வீடெங்கும்

தாய் வலி மறப்பாள்
குழந்தையின் சிரிப்பால்
தெய்வம் தன் உண்மையை
உரைக்கும் குழந்தை உருவில்
மானுடம் தழைக்க வரும்
அரும்புகள் குழந்தைகள்

கொஞ்சுங்கள் அவர்களை
மலையன உணர்ந்த பாரம்
பனியென உருகி ஓடும்
மழலையின் ஒலிக்கு
மயங்காதவர் யார் உளர்?
மனதில் ஈரம் உள்ள
எந்த மானிடரும் சொக்கிப்போவர்
அதன் கீதம் கேட்டு
மொட்டு விரல்கள்
நம் மேல் பட்டால்
எந்த கருங்கல் உள்ளமும்
மெழுகாய் உருகும்
மரத்துப் போன தோலும்
உளுத்துப் போன உடம்பும்
உயிர்பெற்று எழும்

தாயின் வாசம்
தான் அறியும் குழந்தைக்கு
சொந்தம் யார் சொன்னது
தேவ ஆலோசனை
பெற்று வந்ததோ?
தோளில் துள்ளும் கரங்கள்
துயில் கண்டால் உறங்கும் விழிகள்
கையும் காலும் ஆட்டலாம்
கட்டுப்பாடு எதும் இல்லை
துள்ளாத மனமும் துள்ளும்
அள்ளிக் கொஞ்சி செல்லும்
ஆசை கிளற அதுவும் ஓர் காரணம்
எல்லோருக்கும்
கொள்ளை ஆர்வம்
குழந்தைமேல் காரணம்
தானும் எப்போது
சுய நலம் அற்று
கள்ளம் விட்டு
கபடம் கெட்டு
தூய எண்ணம் பட்டு
சோகம் கெட்டு
வாழ்வோம் எப்போது
என்ற ஆதங்கம்

குழந்தை வளர
குறும்பும் வளரும்
கடவுள் அப்படியே நமக்கு
அதை ரசிக்கும் திறனையும்
அருள வேண்டும்
அல்லது குறைந்த பட்ச
பொறுமையையாவது
கொடுக்க வேண்டும்.

குழந்தை சிரிக்கும் போது
கொஞ்சுவதும்
அழும்போது சீறுவதும்
கடவுளும் இப்படி நம்மிடம்
நடக்காமல் இருக்க வோண்டுவதும்
எந்த ஊர் நியாயம்?

முடிந்தவரை நாம் குழந்தைகளுக்கு
அடித்தால் அழும் கலையை
அறிமுகப் படுத்தாமல்
விடுவதே சிறந்தது
நாம் மட்டும் கடவுளிடம்
அழும்போது நம்மை
அரவணைக்க மாட்டாரா
என ஏங்குவதும்
இன்று வரை
எனக்கு விளங்காத விடுகதை
குழந்தைக்கு நாம் மட்டுமே
அறிமுகமான பொருள்
அது அழுதாலும் சிரித்தாலும்
நம்மைதான் நாடும்
அரவணைத்து
அறிவுறுத்தி
ஆளாக்கி ஆண்டவனை ஆராத்திப்போம்
ஆண்டவன் அருள் நிச்சயம் கிட்டும்.

Thursday, August 9, 2007

மனதின் எண்ணங்கள்..

உயிரற்ற ரோமங்கள்
உயர்ந்து உணர்ச்சியில் எழுகிறது.
உதடு துடிக்கிறது
உள்ளக் கொதிப்பின் வெளிப்பாடு
விழியில் வழிகிறது.
கண்ணீரின் சுவை சேர்த்தது யார்?
இது சோகத்தின் சுவையா?
சுகத்தின் சுவையா?
பிரிவை அழிக்க வழி எங்கே?
பசியை ஒழிக்க வழி எங்கே?
பாசம் பொங்க பாவம் ஏது?
சுழலும் வாழ்கை
சுற்றும் பூமி
நிழலும் சிரிக்கும்
நான் ஓர் வரி சொன்னால்.
உழலும் மனதில் ஓர் ஆதங்கம்.
உருவம் இல்லா மனம்
உறங்க துடிக்கும் தினம்.

உளரல் சிதறல்
உருக்கும் குணம்
உருகும் தின்னம்.
மனதை கொடுத்து
மிரளச் செய்தாயா?
மிரண்டு போவேனா?
என்னை என்னுள் தேடி
நான் யார் என்ற கேள்வியை
எனக்கே கேட்டு
விடை காண
மன வீதி எங்கும்
திரிகிறேன்.

அந்த விடையின்
நிறம் என்ன?
சுவை என்ன?
முகம் என்ன?
மொழி என்ன?
தெரியாமல் விழிக்கிறேன்.
தெரிய துடிக்கிறேன்.
விடியுமென்று காத்திருக்கிறேன்.
நம்பிக்கை தோனியிலே
நாளும் என் பயணம் தொடரும்.

வலியை உணர
அனுபவம் வேண்டுமா?
சொன்னால் ஆகாதா?
புரியும்படி சொல்ல கூடாதா?
புதிர் போட்டு விடை தேடுகிறேன்.
நிதம் ஒரு பாடம் கற்கிறேன்.
பயணம் முழுதும் புது முகம்.
பார்கின்றேன்.
காரிருள் காற்று
ஓர் ஒளி தேடுகிறேன்.

நேரம் சேமிக்க
நேரம் ஏது?
பாரம் இல்லாமல்
பயணம் ஏது?
தடையில்லாமல்
தொடரும் பயணம்

விடை தேட
புழுவாக நெளிந்து
பூச்சியாக ஊர்ந்து
பறவை குஞ்சாக
கூட்டில் பிறந்து
பருந்தாக பறந்து
வானின் தூரம் அளந்து
வாழ வந்து வாழ்கிறேன்.
விழியுடன் நாளும் முழிக்கிறேன்.

சிரித்து அழுகிறார்களா?
அழுது சிரிக்கிறார்களா?
உழுது பிழைக்கிறார்களா?
உண்டு பிழைக்கிறார்களா?
உறங்க சொல்கிறார்களா?
உழைக்கச் சொல்கிறார்களா?

இதயம் இனிக்க
உதயமாகும்
என் எண்ணங்கள்.
வாழ்வு சிறக்க
வர்ணம் பூசுகிறேன்.
இந்த வாழ்வில்
போர்களம் இல்லை
அழுகுரல் இல்லை
கொடுந்துயர் இல்லை.
கெடு பகை இல்லை.
சுவைக்க தகுந்த
சுகங்கள் உண்டு.

உண்மை சுரக்கும்
வளம் உண்டு.
அகம் கொண்ட
அன்பு எங்கும் உண்டு.
பரம் பொருள்
காணும் ஞானம் உண்டு.
பூவின் மெல்லிய
இதழ் கொண்ட
மனம் உண்டு.
கருணை என்றும்
காரியத்தில் உண்டு.

அன்பின் வெள்ளம்
தடையில்லா உள்ளம்.
வைகறை பொழுதில்
மலையென வளர்ந்த
மனமெனும் தளிர்
விரிகதிர் போல விரியும்.
நல்ல மாற்றம்
நமக்கு உண்டென்று
மனதிற்கு புரியும்

மனங்களின் எழுத்து
புரியும் போது
மாற்றம் வரும்.
சினங்கள் மறையும்
இணக்கம் ஆகும்.
பிணக்கம் மறந்து போகும்.
சிறுமலர் போல
புன்சிரிப்பு மலரும்.
சிரிப்பின் சக்தி
சிகரங்களை தொட வைக்கும்.

அன்பினால் இயங்கும்
அகிலம் இருக்கும்.
வானம் நம் வசப்படும்.
துவக்கம் தேட
துவங்கும் எண்ணங்கள்.
குறைவில்லா நிறம் கொண்ட
என் சொப்பனங்கள்.
இவை எல்லாம்
இயற்கை நமக்களித்த
அர்பணங்கள்.

தூரம் மறந்த
தொழில் நுட்பங்கள்
துயரம் அறியா
செவி மடல்கள்.
கண்ணீர் அறியா கருவிழிகள்.
மன ஊஞ்சலில் ஆடும்
மகிழ்ச்சியான நேரங்கள்.

உறவுகள் வரவால்
சிறகுகள் விரியும்
உயரம் மறைய
உயரும் நிலை.
மனங்கள் அறியும்
மகிழும் கலை.
மழலை மொழி
புரியும் நிலை.
அமைதியின் விளக்கம்
விளங்கும் நிலை.
அன்பே அமைதி
அகிலம் உனது
என்னும் நிலை.

சொல்லின் சிறையிலே
பொருளின் பிடியிலோ
அடக்கலாகாது.
உணர்வில் வடித்து
உள்ளத்தில் எடுத்து
உள்ளே ஊடுருவும் உண்மை
உயிரில் கலந்த தன்மை.
உயரும் வழி சொல்லும் பெருமை.

Wednesday, August 8, 2007

பார்வைகளும் கேள்விகளும்..

எதிர்பார்ப்புகள் எளிதாகலாம்
ஏமாற்றமும் தரலாம்.
இதய வெள்ளம் போகும் தொலைவு
அளவிட முடியாதது
இயக்கும் எண்ணங்கள் அதிசயமானது.

இயங்கும் உடல் இனிமையானது
இன்பத்தை உணர துடிப்பது
துன்பத்தை உதர துடிக்கிறது.
எதையும் ஒரு அளவில் பார்க்கிறது
எதையும் அளக்கப் பார்க்கிறது.

அளவு குறைவானால் அழுது பார்க்கிறது.
பழுதானால் தொழுது பார்க்கிறது.
இயற்கைக்கு ஊதியம் ஏது?

எண்ணங்களின் எழுச்சி
சொற்களின் தொடர்ச்சி.
சொல்லின் உளி
மனதில் கிலி.
வலியின் வழி
வழியும் குருதி.
வாழ்வின் சறுக்கல்
அதன் மறதி.
மலையும் மடுவாகும்
மணலும் கையிறாகும்
வேண்டும் மனதில் உறுதி

வாழ்வதற்கே பல வாக்கியம்
சொல்லிவிட்டு சென்றார்கள்.
நிலத்தில் உள்ளது
பாலையும் சோலையும்
மேடும் பள்ளமும்,
சிகரங்களும் பள்ளத்தாக்குகளும்
அருவிகளும் ஓடைகளும்
காடுகளும் நகரங்களும்.

கல்லிருக்கும் முள்ளிருக்க்கும்
பாதை நம் கால்கள்
பழக்கப்பட்டதே
சோலைகளும் சொர்கங்களும்
சுகம் காண
நேரம் காலம் கனியப் போகிறதே.

பூச்செடியில் முட்கள் உள்ளது
அது பூவுக்கும் அழகு சேர்கிறது
முள்ளின் வலிமை பூவின் மென்மை
இரண்டும் இருப்பது
ஓர் இடத்தில்
இவை எல்லாம்
இறைவனின் அதிசயப் படைப்பில்
நமக்கு ஒரு பாடம்.

மழலை மனது
பரந்த மனது.
அது பிரபஞ்சத்தின் அளவு
நஞ்சில்லாதது
பிஞ்சு மனது
கறையில்லாதது
குழந்தை மனது

அதுவே முதுமை வரை தொடர்ந்தால்?
துன்பம் என்னும்
துயரம் என்னும்
கூறும் வார்த்தைகள்
நம் மொழியிலிருந்தே
மறைந்து போகும்
மேலவன் கூத்துக்கு
இணையாக நாம்
கூத்து கட்ட முடியுமா?

ஒரு வலியால்தானே
சுகத்தை உணரமுடியும்.
இருவிழியால்தானே
உலகை பார்க்க முடியும்.
பிரபஞ்சத்தின் பேரெழில்
பூமிக்கு வெளியேயும் உள்ளது.

ஒரு எல்லை போட்டு
அடக்க முடியாது
நட்சத்திரக் கூட்டம்
நம்மைப் பார்த்து சிரிக்கிறது.
சிறகில்லாமல் பூமி
வானத்தில் உருள்கிறது.
கைக்குள் அடங்காத நேரத்தை
தனக்குள் அடக்கி சுற்றுகிறது.
நேரம் மறந்து
நில்லாமல் சுற்றுகிறது
சோர்வில்லாமல் சுழல்கிறது.

காலங்களால் அளக்கமுடியாத
வயதானாலும் தினமும் புதிதாக பிறக்கிறது.

இதை திறமை என்பதா?
பொறுமை என்பதா?
வலிமை என்பதா?
முழுமை என்பதா?
பொழுதை பொத்தி வைக்க
பொந்து எங்கே உள்ளது?
வியர்வை இன்றி வலியில்லாமல்
வழிதவறாமல் தொடரும்
பயணம் துவங்கும் ஜனனம்.

வண்ணம் வானில் பூச
நிறம் கிடைக்காமல் திணறுகிறதா?
கருமைதான் கடவுளின் நிறமா?
சூரியனால் இருளை உணர முடியுமா?
பூமியின் காதல் சூரியனிடமா?
ஏன் அதையே சுற்றி வருகிறது?

தன்னை சுற்றும்
நிலவுக்கு பதில்லாமல்
நாணமா? நடுக்கமா?
பூமியே உனது நடுக்கத்திற்கு
மக்களல்லவா
கடுகு போல் சிதறுகிறார்கள்
இது உன் கோபமா? எரிச்சலா?
பச்சை புல்வெளியும்
நீல கடலும் உடுத்தியிருப்பதால்
உனக்கு
உன் அழகின் மேல் கர்வமா?
உன் சுற்றுப் பாதையை
கற்றுதந்தவர் யார்?
விற்பனை இல்லாத
என் கற்பனை கேள்விகளுக்கு
பல் இளிக்காமல் பதில் தருவாயா?
அல்லது
முகம் மறைத்து முக்காடிட்டு
முனகாமல் போவாயா?
உன் உதடுகள் பழகும் மொழியை
எனக்கு கற்றுத் தருவாயா?
உறக்கம் இல்லாமல் உலவும் நீ
உருகும் என்னை மறக்காதே?

எதுவும் தெரியாதது போல் மழுப்பாதே!
நீ உன்னையே சுற்றிக் கொள்ளவும்
நெருப்புத் தலைவனை சுற்றவும்
எங்கிருந்து பெறுகிறாய் சக்தி?
அதன் உத்தியை சொல்ல கூடாதா?

முக்தி அடைய புத்தி வேண்டுமா?
சுகத்தின் பொருள் என்ன?
சுலபத்தில் விடை உண்டா?
சொல்லத்தான் பதில் உண்டா?
சொன்னால்தான் புரிந்திடுமா?
சொல்லினால்தான் விளங்கிடுமா?
விதியை வெல்ல வழி உண்டா?
விதியே வென்றால் பழி உண்டா?
விதியே கதி என்று
சதி செய்யாமல்
நாமே விதியானால் என்ன?
விலகும் தடைகள்
நம் பாதை வழியில் இருந்து.
விடியலை உருவாக்க நமக்குள்
இருக்கும் வெளிச்சத்தை
வெளியில் விட்டு
பிரபஞ்சத்தின் இருள் போக்கலாம்.

Saturday, July 28, 2007

பதினாறு பேறுகள் பற்றிய அழகிய பாடல்..

"பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க" என்று நம் மரபில் பெரியோர்கள் வாழ்த்தி வருகிறார்கள். இது பற்றிக் கூறும் பாடலைப் பற்றி தமிழ் அறிஞர் ஹரிகிருஷ்ணன் அவர்களிடம் கேட்டேன். அவர் தந்த அந்தப் பாடலும், விளக்கமும் இதோ -.. அது அபிராமி அம்மை பதிகத்தின் முதல் பாடல். அபிராமி அம்மை பதிகத்தின் பதினோரு பாடல்களும் இங்கே கிடைக்கின்றன
:http://www.tamil.net/projectmadurai/pub/pm0026/abipatsc.html

கலையாத கல்வியும் குறையாத வயதுமோர் கவடுவா ராத நட்பும்
.....கன்றாத வளமையும் குன்றாத இளமையும் கழுபிணிஇ லாத உடலும்
சலியாத மனமும்அன் பகலாத மனைவியும் தவறாதசந் தானமும்
.....தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும் தடைகள்வா ராதகொடையும்
தொலையாத நிதியமும் கோணாத கோலுமொரு துன்பமில் லாத வாழ்வும்
.....துய்யநின் பாதத்தில் அன்பும்உதவிப் பெரிய தொண்டரொடு கூட்டு கண்டாய்
அலையாழி அறிதுயிலும் மாயனது தங்கையே ஆதிகட வூரின் வாழ்வே
....அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி அருள்வாமி அபிராமியே!

பொருள் : கல்வி, நீண்ட ஆயுள், கபடில்லாத நட்பு, நிறைந்த செல்வம், எப்போதும் இளமை, பிணி இல்லாத ஆரோக்கியமான உடல், சலிப்பு வராத மனம், அன்பு நீங்காத மனைவி, புத்திர பாக்கியம், குறையாத புகழ், சொன்ன சொல் தவறாமல் இருப்பதற்கான அருகதை, எந்தத் தடையும் ஏற்படாத கொடை(அளித்தல்), செங்கோல் வளையாமல் பரிபாலிக்கும் அரசன், துன்பமில்லாத வாழ்வு, உன் பாதத்தின்மேல் பக்தி, இந்தப் பதினாறுக்கும் அப்பால் உன் தொண்டர்களை என்றும் பிரியாத கூட்டு. இவற்றை அருள வேண்டும்.

Wednesday, July 25, 2007

பாரதியார் பாடல் - கண்ணம்மா என் காதலி

பாயு மொளி நீ யெனக்குப் பார்க்கும் விழி நானுனக்கு;
தோயும் மது நீ யெனக்குத் தும்பியடி நானுனக்கு;
வாயுரைக்க வருகுதில்லை; வாழிநின்றன் மேன்மை யெல்லாம்;
தூயசுடர் வானொளியே! சூறையமுதே! கண்ணம்மா! 1

வீணையடி நீ யெனக்கு, மேவும் விரல் நானுனக்கு;
பூணும் வடம் நீ யெனக்கு, புது வயிரம் நானுனக்கு;
காணுமிடந்தோறு நின்றன் கண்ணி னொளி வீசுதடி!
மானுடைய பேரர சே! வாழ்வு நிலையே! கண்ணம்மா! 2

வான் மழை நீ யெனக்கு, வண்ணமயில் நானுனக்கு;
பான மடி நீ யெனக்குப் பாண்டமடி நானுனக்கு
ஞான வொளி வீசுதடி; நங்கை நின்றன் சோதிமுகம்;
ஊனமறு நல்லழகே! ஊறு சுவையே! கண்ணம்மா! 3

வெண்ணிலவு நீ யெனக்கு, மேவு கடல் நானுனக்கு;
பண்ணுகதி நீ யெனக்குப் பாட்டினிமை நானுனக்கு;
எண்ணியெண்ணிப் பார்த்திடிலோர் எண்ணமிலை நின்சுவைக்கே;
கண்ணின் மணி போன்றவளே! கட்டியமுதே! கண்ணம்மா! 4

வீசு கமழ் நீ யெனக்கு, விரியுமலர் நானுனக்கு;
பேசுபொருள் நீ யெனக்குப் பேணுமொழி நானுனக்கு;
நேசமுள்ள வான்சுடரே; நின்னழகை யேதுரைப்பேன்?
ஆசை மதுவே, கனியே, அள்ளு சுவையே கண்ணம்மா! 5

காதலடி நீ யெனக்குக் காந்த மடி நானுனக்கு;
வேதமடி நீ யெனக்கு, வித்தையடி நானுனக்கு;
போதமுற்ற போதினிலே பொங்கிவருந் தீஞ்சுவையே!
நாதவடி வானவளே! நல்லஉயிரே கண்ணம்மா! 6

நல்லவுயிர், நீ யெனக்கு, நாடியடி நானுனக்கு;
செல்வமடி நீ யெனக்கு, சேம நிதி நானுனக்கு;
எல்லையற்ற பேரழகே! எங்கும் நிறை பொற்சுடரே!
முல்லை நிகர் புன்னகையாய்! மோதுமின்பமே! கண்ணம்மா! 7

தாரையடி நீ யெனக்குத் தண்மதியம் நானுனக்கு;
வீரமடி நீ யெனக்கு, வெற்றியடி நானுனக்கு;
தாரணியில் வானுலகில் சார்ந்திருக்கும் இன்பமெல்லாம்
ஒருருவமாய்ச் சமைந்தாய்! உள்ளமுதே! கண்ணம்மா! 8

Monday, July 23, 2007

கடவுளின் கர்வம் - பெண்..

உலகை உருட்டி
உயிரை ஊட்டி
இயங்கச் சொல்லி
இயக்க வைத்து
உருவம் கொடுத்து
அழகு பார்த்து
வாழ வைத்து
ஆளப் பார்த்தான்
தான் படைத்த
ஒவ்வொன்றும்
தரணி செழிக்க
வேண்டுமென்று
தனக்கோர் உருவம்
வேண்டுமென்று
தவித்து வடித்த
உருவம்தான் பெண்.

பிழை என்று பல செய்தாலும்
பொறு என்று பார் உணர
வைத்தாள்(ன்) கடவுள்.
'ள்' என முடிதல் அவள் என்றும்
'ன்' என முடிதல் அவன் என்றும்
சொல்லி கடவுள்
பெண்மையில் கலக்கச் செய்து
அன்பை உண்மையில்
உணர வைத்து
படைக்கும் தொழில் ஏற்று
பஞ்சு போல் நெஞ்சு கொண்டு
அதில் பாசம் கலந்து
பற்று வைத்து
அள்ளி எடுத்து
அணைத்து கொள்வாள் தாய்
அக்காள், தங்கை
அத்தை அண்ணி
என்று முகம் பல உண்டு அவளுக்கு
அன்பை சிரிப்பால் உதிர்பாள்
அறிவை அள்ளித் தெளிப்பாள்
காதல் கொண்டு காவல் காப்பாள்
கண்ணைக் கொண்டு கடலை அளப்பாள்
காமம் கொண்டு மோகம் வளர்ப்பாள்
வேகம் கொண்டு தாகம் தணிப்பாள்
தோழி என்று துவங்குவாள்
ஆழிப் பேரலையாய் விழுங்குவாள் காதலி

மனைவி என்று
மாற்று வேடம்
துணைவி என்று
நிழல் போல் தொடர்ந்து
கணவனுக்கு காத்து நின்று
கடமை கொண்டு காத்து நின்று
கருணைக் கடல் வென்று
கரை சேர்ப்பாள்
கறை இல்லா
உரை செய்து
உள்ளம் மகிழ வைப்பாள்
விடுப்பில்லா வேலை செய்து
விளங்க வைப்பாள்
அடுப்பில் வெந்து
சுகம் மறந்து
பசிச் சுமை குறைப்பாள்
தியாகம் என்னும் யாகம் செய்து
தரணி வாழ தானும் வாழ்வாள்
கற்பை தனக்குள் வைத்து
கருப்பை காப்பாள்
குடும்பம் என்னும் அரங்கம் ஏறி
குழப்பம் இன்றி பழக்கம் கற்று
ஒழுக்கம் உணர்ந்து பாத்திரம் அறிந்து
படுக்கை படர்ந்து
பத்தினி என்று உத்தமியானள்

பழி சொன்னால்
விழி துடைப்பாள்
மொழியின்றி வழி செய்வாள்
பாச வேலியிட்டு
குழந்தைப் பயிர் வளர்ப்பாள்
உயிர் ஊட்டி
உறங்க வைப்பாள்
அழகின் அர்த்தம்
அகராதியில் உள்ளது
அவளின் பெயர் கொண்டு
உயிர் வளர்க்கும்
இயந்திரம் அல்ல அவள்
உள்ளம் உருக வைக்கும்
மந்திரம்
உலகம் சொல்ல
இல்லை சுதந்திரம்
முக்தி காண அவள் சக்தி வேண்டும்
முத்து குளிக்க அவள் பக்தி வேண்டும்
வேடம் ஏற்று
பாடம் புகட்டும்
புடம் போட்டத் தங்கம் அவள்.
அவள்தான் பெண்.

கடவுளின் கர்வம் - இயற்கை..

கால் போன போக்கில்
சுழலும் சக்கரம்
காலம் அதன் மந்திரம்
தடம் மாறாமல்
தடம் கொண்டு
ஓடிக் கொண்டிருக்கும்
நிற்காமல் அளவில்லா எல்லை
தடுப்புச் சுவரில்லை
காவல் காக்கும் வேலை இல்லை
எண்ணிலடங்கா கோள் குடும்பங்கள்
ஒளி உமிழும் வின்மீன்கள்
ஒவ்வொரு கூட்டுக் குடும்பமும்
தனிக்குடித்தனம் செய்கின்றன.

நெருப்பு பந்தை
உருளச் செய்தான்
அதன் ஒளியை
பிரபஞ்சத்தில்
படரவிட்டான்
உருவம் இல்லை
உள்ளம் இல்லை
உறக்கம் இல்லை
உடுப்பும் இல்லை

சதையுடன் எலும்புடன்
செந்நிற குருதி கலந்து
சிலவற்றை ஊரவிட்டான்
சிலவற்றை பறக்கவிட்டான்
சிலவற்றை நடக்கவிட்டான்
சிலவற்றை நீந்தவிட்டான்

ஆதியும் இன்றி
அந்தமும் இன்றி
அலைவான் அவன்
உழைக்க வேண்டாம்
ஊதியம் வேண்டான்
ஆனால் பிழைக்க தெரியும்
ஆக்க தெரியும்
காக்க தெரியும்
அழிக்கவும் தெரியும்
நீர் வைத்து
நிலமும் வைத்து
அதில் வான் வைத்து
வலியும் வைத்தான்

காற்று தந்து
தூசும் தந்து
மாசில்லா மரமும் தந்து
மண்ணை படைத்து
பொன்னைப் படைத்து
மனமும் வைத்தான்
மனதில் ஆசை வைத்தான்
பாசம் வைத்தான்
வேஷம் வைத்தான்
மகிழ்ச்சி வைத்தான்
சூழ்ச்சி வைத்தான்
அத்தனைக்கும்
அளவை வைக்க மறந்தான்
இயற்கை அழகை படைத்தான்
ரசனை உணர்வுடன்
ரசிக்க சொன்னான்.

உணவை வைத்து
அதில் சுவையை கலந்து
புசிக்க சொன்னான்
வாழ்கை தந்து
வாழச் சொன்னான்
அதில் பாடம் கற்று
படிக்கச் சொன்னான்
பழகச் சொன்னான்
மொழி வைத்து
நிறம் வைத்து
மனம் வைத்து
மக்களை பிரித்தான்
ஆட்டம் தொடங்கி
நோட்டம் பார்த்தான்
ஆட்டம் போட்டவனை
அடங்க செய்தான்
பாசம் கொடுத்து
பிரிவைக் கொடுத்தான்
பண்பைச் சொல்லி
அன்பை தந்தான்

கஷ்டம் கொடுத்து
கருணைக் காட்டினான்
ஆயிரம் கை உண்டு
கோடி வேலை உண்டு
பாயிரம் பாட வைப்பான்
பக்தர்கள் வேண்டி நிற்பர்
பாமரர் பாடி தொழுவர்
வற்றாத அருள் உண்டு
குறையாத பொருள் உண்டு
குன்றாத குணம் உண்டு
மங்காத மனம் உண்டு
மாயம் பல உண்டு
மெய் என்பான்
பொய் உரையான்
வையகம் வாழ வைத்து
வாழ்ந்து வாழ்த்துவான்.

Wednesday, July 11, 2007

மௌனம்

மௌன மொழி இறைவன் மொழி
வர்ணம் இல்லா சித்திரம் மௌனம்
வார்த்தை கொட்ட ஆயிரம் வழி உண்டு
ஒலியின் வலி உணர்ந்தவர் பலருண்டு
மௌன மொழி கேட்பவர் சிலருண்டு
மௌனத்தின் ஒலி மனதை வருடும்
சாந்தத்தின் நிழல் உள்ளத்தில் படரும்
பேசா நோன்பு வாழ்வின் மாண்பு
காந்தியின் ஆயுதம் மௌனப் போராட்டம்
அதுவே நம் நாட்டின் சுதந்திரத் தேரோட்டம்
ஆயிரம் வாளின் கூர்மை ஓர் மௌனத்தின் பதில்
எல்லா மலரின் மணம் தெரியாது
சொல்லா மௌனம் குணம் தெரியாது
மௌனக் கணை தொடுத்தால்
இறைவன் துணை நின்று நம்மை காப்பான்
வார்த்தைகளின் வடிவறியா மொழி மௌனம்
வாழ்வின் வழி அறியவைக்கும் மொழி மௌனம்
மௌனத்தின் அலை உள்ளத்தில் அடித்தால்
உறங்கும் கலை விலை பெரும்
உலகம் வியக்கும் சிந்தனை உயிர் பெரும்
காதலை கனியவைக்கும் மொழி மௌனம்
அதுவே காதலர்கள் கானம்.

மௌனத்தினால் வருவது மன அமைதி
கோபத்தின் கரம் குணத்தை அழிக்கும்
மௌனத்தின் ஈரம் மனதை வளர்க்கும்
ஊமையின் குரல் மௌனத்தின் பாடல்
பேரலையில் ஓடும் ஓடம் கடினப் பயணம்
அலையில்லா ஆழ் கடல் அமைதிப் பயணம்

மௌன ஊற்று
பகைமைக்கு வறட்சி
நட்பின் வளர்ச்சி
மௌனத்தில் மயங்கும் மனம்
சிகரம் தொடும் வானம்.

மௌன மணம் பரப்பும் மனம்
இறைவன் வசிக்கும் இடம்
ஒலி வெள்ளத்தில் உறங்கா விழிகள்
மௌனப் படுக்கையில் மயங்க துடிக்கும்
மௌனத்தின் மறுபெயர் அமைதி
அமைதி தேடி அலைபவர் கோடி
உண்மை காண செல்வார் இறைவனை நாடி
மௌனச் சிந்தனை அழிக்கும் நம் வினை
மௌனத்தில் அமைதி நாடி தொடரும் கடவுள் துணை
துயர் கண்ட நெஞ்சம் துயில் கொள்ள
ஆரவாரம் இல்லாமல் அமைதிகான
கவலைக் கொண்ட மனது

கட்டுண்ட காளையாய்
கோப வெறியை அடக்க
அன்பின் உறைவிடம்
இறைவன் இருப்பிடம்
பிரபஞ்சத்தின் பேரின்பம் உணர
பிழை களைந்து மன நிம்மதி காண
ஆரோக்கிய வாழ்வு வாழ
மௌனத்தை கடைபிடிக்க
வேண்டிய இடத்தில கடைபிடித்து
காண்போம் மகிழ்ச்சி வாழ்வின் வளர்ச்சி.

Friday, July 6, 2007

பாரதியார் கவிதை

மனதில் உறுதி வேண்டும்
<<*மகாகவி சுப்பிரமணிய பாரதியார்*>>
மனதில் உறுதி வேண்டும்
வாக்கினிலே இனிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கினப் பொருள் கைப்பட வேண்டும்
கனவு மெய்ப்பட வேண்டும்
கைவசமாவது விரைவில் வேண்டும்
தனமும் இன்பமும் வேண்டும்
தரணியிலே பெருமை வேண்டும்
கண் திறந்திட வேண்டும்
காரியத்தில் உறுதி வேண்டும்
பெண் விடுதலை வேண்டும்
பெரிய கடவுள் காக்க வேண்டும்
மண் பயனுற வேண்டும்
வானகம் இங்கு தென் பட வேண்டும்
உண்மை நின்றிட வேண்டும்
ஓம்! ஓம்! ஓம்! ஓம்!

Wednesday, June 20, 2007

கனவுகள்..

கனவுகள் துரத்தும் காலம் கரையும்
விலையாய் கொடுத்து அது விரையும்
கண்ணில் காண்பது மட்டுமா கனவு?
கருத்தில் இருப்பதும்தான் கனவு.

கட்டுப்பாடில்லாமல் கட்டுக்குள் வர மறுக்கிறது
பிடி கொடுக்காமல் அது படை எடுக்கிறது
எடுத்த வேகத்தில் அடுத்த அடி வைக்கிறது
வீசும் காற்றை விட அது வீரு நடை போடுகிறது

விருப்பம் கேட்காமல் மன வீட்டில் அடைகிறது
சில நேரம் விரும்பி அழைத்தாலும் வீம்பு பிடிக்கிறது
பகுதி நேரத் தொழிலாய் பார்த்து செல்கிறது
பழுதில்லாமல் அதன் பயணம் தொடர்கிறது

நெஞ்சில் ஊஞ்சல் ஆடி நெருக்கடி தருகிறது
நேரம் ஏது காலம் ஏது நேரில் வருவதற்கு
கண்ணின் உறக்கத்தை களவாடுகிறது
கருமம் செய்ததால்தான் வருகிறதா?

கண்ணுக்குள் இருந்து கருவிழியை உருவுகிறது
மண்டைக்குள் மலையாக
மனதிற்குள் பாரமாக கரைய மறுக்கிறது
மறுத்தால் அறைந்து நொருக்குகிறது

கனவுக்கு யார் உணவு போடுகிறார்கள்?
நிலவு கரைந்து வளர்வது போல
கனவும் கலைந்து மலர்கிறது.
நல்ல, கொட்ட என கனவுகளில் விதை தூவுவது யார்?

கனவு காட்சிகாட்டி காயபடுதுகிறது.
நினைவு நெருப்பூட்டி நோகடிக்கிறது.
நிலவின் ஒளி நிலையானதல்ல
கனவின் காட்சியும் நிலையானதல்ல

தலையின் மூலையில் உதிக்கும் ஒரு எண்ணகீற்று
உருவம் தந்து ஓட்டம் தந்து நம்மை ஆட்ட பார்க்கிறது.
நினைவின் எதிரொலியாய்
கனவு கண்ணுக்குள் வருகிறது

பகலை பார்த்து பயம் அதற்கு
இரவின் இருளில் நிறம் எதற்கு?
கனவின் சூட்டால்
இமை மயிர் கருகும்

கனவுக் காளையை இருளில்
இட்டுச் செல்லாமல் எதிர்கால
ஒளி நோக்கி
திருப்பி விட வேண்டும்

சில கனவுகள் மறதியை
மறுத்து மனதில் பதிந்து விடும்
அதை விடுவிக்க முடியாமல்
விரக்தியில் விழி இமைகள் நனைந்து விடும்.

கருமம் பிடித்த கனவுகளுக்கு
கதவுகள் போட்டு தாழிடவும்
நல்ல விதைகளை நினைவில் தூவினால்
பல நல்ல கனவுப் பயிர் விளையும்
விளை நிலமும் நல்ல விளைச்சல் எடுத்து தரும்
விருந்தும் சுவைக்க விருப்பம் வரும்.

நல்ல கனவை கலைக்க குலைக்க
கடுங் கோபம் கொண்ட காரியம் நடந்தாலும்
கட்டு குலையாமல் தொடர வேண்டும்.
கனவுக் கோலத்தை
மழை மேகம் கொண்டு அழிக்கவும்
பிழை என்று துடைக்கவும்
பலரும் பலவாறு முனைவர்

பாவி என்றும்
பாதகம் இழைத்தேனா என்றும்
இடிவிழுந்தார்போல் இடிந்து உட்காராமல்
மலையென வளர்ந்து
முகிலை முகர வேண்டும்

பூவுக்குள் பூகம்மே வந்தாலும்
வாசம் வீசும் வேலைக்கு விடுமுறை கிடையாது
பூத்து, காய்த்து, கனிந்து வரும் வரை
காத்து கடமை செய்ய வேண்டும்

மனக் கோட்டை மலைகோட்டையாய்
உறுதியுடன் உயர்வு பெற
உண்மையான கனவு காண
கடவுள் துணை வேண்டும்

இடர் கொடுக்கும் இடுக்கண் களைந்து
மிடுக்குடன் கனவை மெய்பிக்க வேண்டும்.

அதை பழித்தவரும் பிழைக்கட்டும்
பிறகு இருந்து பார்க்கட்டும்
பிழை அல்ல நிறை என்று காணட்டும்
கண்டு மகிழட்டும்.
நம்மை வீழ்த்த விரும்புவர்
விருப்பம் என்றைக்கும்
நிறைவேறாது போகட்டும்.
காற்றில் பறக்கும் காற்றாடியாய்
சுற்றி கரைந்து போகட்டும்.

விதை தூவும் வேலையை
விரைந்து முடிக்க வேண்டும்
ஆனால் அதற்கு முடிவேது?
வேலை தொடர்ந்தால்தான்
வேளை ஒன்றுண்டு
நாளை நமக்குண்டு

சிரமம் இல்லாமல்
சிரம் ஏற்று உரம் போட்டு
மெறுக்கேற்றி உயிர்பிக்க வேண்டும்
உயர்ந்து உளம் வாழ்த்த வேண்டும்.

வற்றாத அருவி போல்
வழி தேடி கரை காண்போம்
குறை களைவோர் குணம் அதுதான்
குற்றம் சொல்லாமல் தினம்
வளர்ந்து நமை உணர்ந்து
நன்மை செய்வோம்.

கருவறை ஒரு திரை விலகும் வரை
வைராக்கியம் காத்து காண்போம் தரிசனம்
கருவில் கிடந்த பத்து மாதத்தில்
கற்பனை கனவு வளர்த்தோம்
பயணம் தொடர்ந்து
கட்டிலில் கிடத்தி
காவியம் பாடி
பெயர் சூட்டி
தரையில் வளர்ந்து
தவழ்ந்து நடந்து
கனவுக்கு உருவம்
கொடுக்க முனைந்து
தெரியாமல் காளை பருவம் அடைந்து
புதுக் கற்பனை
புதுக் கனவு
புதுக் கவிதை தோன்றி
புது யுகம் படைக்க
இது நேரம் என கணக்கு பாராமல்
காகிதம் கிறுக்கி தொடரும் பயணம்
பெற்றோர் பிள்ளைகள் தம் மனைவியோடு
சொந்த பந்தம் படை சூழ
இயற்கை இறைவர் இசைந்து
கனவுக் கடலில் நீந்தி
முத்தெடுத்து கரை சேர்வோம்.

Friday, June 15, 2007

தமிழில் தட்டெச்சு செய்ய..

http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm

and

http://www.google.com/transliterate/indic/Tamil#

and

http://www.suratha.com/reader.htm
First type and click Romanised..

and
http://www.pdstext.com/

and
http://service.monusoft.com/TamilTypePad.htm


and

http://www.iit.edu/~laksvij/language/tamil.html
In this website you can even download the script and type it when you are offline also..

and

Online Keyboard on this website
It seems to be similar to tamilzhnet99 strokes..



and

http://www.lexilogos.com/keyboard/tamil.htm


http://ezilnila.com/nila/unicode_writer.htm

இங்க சொடக்கி பாருங்க தமிழில் தட்டெச்சு பற்றி நிறைய சொல்லி இருக்காங்க..
http://buhari.googlepages.com/anbudan.html##unithamil

Thursday, June 14, 2007

காலை வேளை..

காலைக் கதிரவன் கண்விழிக்க
பனிப் பெய்யும் இளங்காலை வேளை
சுகம் கூடும் சோம்பிப் படுத்தால்
காலத்திற்கு கருணை இல்லை
நிற்காமல் ஓடுவதே அதன் வேலை
மேனியில் படும் குளிர்காற்று
போர்வைக்குள் போகும் புகலிடம் கேட்டு
சூடே சுகமென்று சுருதி போடும் நெஞ்சம்
படுக்கையே பெரும்பாலும் தஞ்சம்
வெளிச்ச வெப்பம் வீட்டினுள்
வரவில்லை என்று
படுக்கை இழுத்தது
உடல் படுக்க துடித்தது
முதல் அடி எடுக்க முனகும் மனம்
முயன்று பார்க்க முயலும் குணம்.

கடினப் பிரயாசை
கட்டிலை விடுத்து
போர்வையை விலக்கி
உடலைத் தாங்கி
ஓட வேண்டும் குளியல் அறை
விளக்கை விடியலாக்கி
தண்ணீரை வெந்நீர் ஆக்க
எரிந்தது சிவப்பு விளக்கு
குளியலறையிலும் குளிர்
குடி கொண்டிருந்தது.

கொண்டையை திருகினால்
குழாயிலிருந்து குபுக்கென்று
கொட்டும் குளிர் நீர்
அந்த நீர்த் துளிகள்
தெரிப்பதே ஓர் அழகு
பல் துலக்கும் சாதனம்
பற்பசை அதன் தலையில் இட்டு
வென்பற்களில் தேய்த்து
நுரை தள்ள உமிழ்ந்து
வாய் கொப்பளித்து
கண்ணாடி பார்த்து
முகமுடி சரிசெய்து
ஆடை களைந்து
அகம் துலக்க
தண்ணீர் திறந்து
அது வெந்நீர் ஆகும் வரை
வேடிக்கைப் பார்த்து
விளங்கும் புதிர் தெரியாமல்
வெளிச்சம் பார்த்து
வெந்நீர் தேகம் தொடும் வரை
கால விரயம் ஆகியது
வெந்நீர் வேகமாய்
மேனியில் பரவ
தேகம் சூடேற
சூட்டின் சுகத்தில்
குளிர் மறந்து போனது
வெந்நீரின் வெப்பம் தேகத்தின்
ஒவ்வொரு பாகத்திலும்
படிந்து போனது
கடிகாரம் காலத்தைக் காட்ட
நினைவில் ஓர் சினுங்கல்
துண்டால் உடலை சுருட்ட
ஒத்தி எடுக்க
உடல் மேல் இருந்த
நீர் கொப்பளங்கள் மறைந்தன
சமுதாயத்தை சந்திக்க
சீருடை வேண்டாம்
ஆனால் ஓருடை வேண்டும்
நாடறியும் நாகரீகம்
நாம் அணியும் உடையில் உள்ளது
துவைத்த உடையில்
தண்ணீர் பிழிய
சுருக்கம் வரும்
உலரும்போது சூடு போட்டு
சுருக்கம் தவிர்த்து
சுருங்கிய ஆடை பார்த்தால்
பலர் முகம் சுருங்கும்
மானம் காக்கும் ஆடை கண்டு
மரியாதை செய்யும்
மனிதர் பலருண்டு
மேடை ஏறும் நிலை
வேடம் போட என்ன பிழை
உடலும் மனமும்
ஒருங்கே உழைத்தால்
உயர்வு என்றும்
நம் உடன் உண்டு
உயரும் வழிஉண்டு
இறைவன் துணையோடு
நம்பிக்கை நம் செயலோடு

Wednesday, June 13, 2007

பெற்றோர்

தாய் - தன்னை கொடுத்து உன்னை தந்தாள்
தந்தை - தன்னை வருத்தி உன்னை வளர்த்தார்

தாய் மனம் மகிழ்ந்தால் தரணி தழைக்கும்
ஆண்டவனால் அனுப்பப்பட்டவர்கள்
அம்மாவும், அப்பாவும்.

வலி பொறுத்தாள்
வாழ்க்கை கொடுத்தாள்
அன்பை ஊட்டி அகிலத்தை காட்டினாள்
உதிரம் கரைத்து உணவு கொடுத்தாள்
நாவின் சுவையை நாளும் வளர்த்தாள்
அவன் உறங்க இவள் விழித்திருந்தாள்
அவன் விழிக்க இவள் காத்திருந்தாள்
அவன் அழுதால் இவள் ஆசுவாசபடுத்தினாள்
அவன் வளர்ந்தான் இவள் மகிழ்ந்தாள்

அவன் உல்லாசித்தான் இவர் உழைத்தார்
எழுதப் படித்தான் எழுச்சி கொடுத்தார்
பள்ளி செல்ல பழக்கிக் கொடுத்தார்
வேகம் என்றான் விவேகம் சொன்னார்
ஆட்டம் போட்டான் அளவு என்றார்
அவன் செலவழித்தான் இவர் பணத்தை
அவன் படிக்க இவர் கடன் வாங்கினார்

அவன் வளமை இவர்கள் பெருமை
அவன் உயர்வு இவர்கள் சிறப்பு

அவன் மகிழ்ச்சி இவர்கள் ஆனந்தம்
அவன் தடம் மாறினால் இவர்கள் தடுமாறினார்கள்
அவன் துள்ளி குதித்தால் இவர்கள் அள்ளி எடுத்தார்கள்
அவன் பறந்து வந்தால் இவர்கள் பார்த்து பரவசப்பட்டார்கள்
அவன் பட்டம் வென்றால் இவர்கள் கொண்டடினார்கள்
அவன் சிரிப்பு இவர்கள் சிலிர்ப்பு

இவர்கள் அன்பின் வெள்ளம் அணையின்றி ஓடியது
அந்த ஊற்றுக்கு என்றுமே
வறட்சி இல்லை
முடிவில்லை
அழிவில்லை
நஞ்சில்லை
அயர்வில்லை
பலன் கருதா அன்பு
பரிவோடு காட்டும் அன்பு
முடிவில்லா அன்பு
முழுதும் கிடைக்கும் அன்பு

 
software software