Wednesday, July 11, 2007

மௌனம்

மௌன மொழி இறைவன் மொழி
வர்ணம் இல்லா சித்திரம் மௌனம்
வார்த்தை கொட்ட ஆயிரம் வழி உண்டு
ஒலியின் வலி உணர்ந்தவர் பலருண்டு
மௌன மொழி கேட்பவர் சிலருண்டு
மௌனத்தின் ஒலி மனதை வருடும்
சாந்தத்தின் நிழல் உள்ளத்தில் படரும்
பேசா நோன்பு வாழ்வின் மாண்பு
காந்தியின் ஆயுதம் மௌனப் போராட்டம்
அதுவே நம் நாட்டின் சுதந்திரத் தேரோட்டம்
ஆயிரம் வாளின் கூர்மை ஓர் மௌனத்தின் பதில்
எல்லா மலரின் மணம் தெரியாது
சொல்லா மௌனம் குணம் தெரியாது
மௌனக் கணை தொடுத்தால்
இறைவன் துணை நின்று நம்மை காப்பான்
வார்த்தைகளின் வடிவறியா மொழி மௌனம்
வாழ்வின் வழி அறியவைக்கும் மொழி மௌனம்
மௌனத்தின் அலை உள்ளத்தில் அடித்தால்
உறங்கும் கலை விலை பெரும்
உலகம் வியக்கும் சிந்தனை உயிர் பெரும்
காதலை கனியவைக்கும் மொழி மௌனம்
அதுவே காதலர்கள் கானம்.

மௌனத்தினால் வருவது மன அமைதி
கோபத்தின் கரம் குணத்தை அழிக்கும்
மௌனத்தின் ஈரம் மனதை வளர்க்கும்
ஊமையின் குரல் மௌனத்தின் பாடல்
பேரலையில் ஓடும் ஓடம் கடினப் பயணம்
அலையில்லா ஆழ் கடல் அமைதிப் பயணம்

மௌன ஊற்று
பகைமைக்கு வறட்சி
நட்பின் வளர்ச்சி
மௌனத்தில் மயங்கும் மனம்
சிகரம் தொடும் வானம்.

மௌன மணம் பரப்பும் மனம்
இறைவன் வசிக்கும் இடம்
ஒலி வெள்ளத்தில் உறங்கா விழிகள்
மௌனப் படுக்கையில் மயங்க துடிக்கும்
மௌனத்தின் மறுபெயர் அமைதி
அமைதி தேடி அலைபவர் கோடி
உண்மை காண செல்வார் இறைவனை நாடி
மௌனச் சிந்தனை அழிக்கும் நம் வினை
மௌனத்தில் அமைதி நாடி தொடரும் கடவுள் துணை
துயர் கண்ட நெஞ்சம் துயில் கொள்ள
ஆரவாரம் இல்லாமல் அமைதிகான
கவலைக் கொண்ட மனது

கட்டுண்ட காளையாய்
கோப வெறியை அடக்க
அன்பின் உறைவிடம்
இறைவன் இருப்பிடம்
பிரபஞ்சத்தின் பேரின்பம் உணர
பிழை களைந்து மன நிம்மதி காண
ஆரோக்கிய வாழ்வு வாழ
மௌனத்தை கடைபிடிக்க
வேண்டிய இடத்தில கடைபிடித்து
காண்போம் மகிழ்ச்சி வாழ்வின் வளர்ச்சி.

No comments:

 
software software