Thursday, June 14, 2007

காலை வேளை..

காலைக் கதிரவன் கண்விழிக்க
பனிப் பெய்யும் இளங்காலை வேளை
சுகம் கூடும் சோம்பிப் படுத்தால்
காலத்திற்கு கருணை இல்லை
நிற்காமல் ஓடுவதே அதன் வேலை
மேனியில் படும் குளிர்காற்று
போர்வைக்குள் போகும் புகலிடம் கேட்டு
சூடே சுகமென்று சுருதி போடும் நெஞ்சம்
படுக்கையே பெரும்பாலும் தஞ்சம்
வெளிச்ச வெப்பம் வீட்டினுள்
வரவில்லை என்று
படுக்கை இழுத்தது
உடல் படுக்க துடித்தது
முதல் அடி எடுக்க முனகும் மனம்
முயன்று பார்க்க முயலும் குணம்.

கடினப் பிரயாசை
கட்டிலை விடுத்து
போர்வையை விலக்கி
உடலைத் தாங்கி
ஓட வேண்டும் குளியல் அறை
விளக்கை விடியலாக்கி
தண்ணீரை வெந்நீர் ஆக்க
எரிந்தது சிவப்பு விளக்கு
குளியலறையிலும் குளிர்
குடி கொண்டிருந்தது.

கொண்டையை திருகினால்
குழாயிலிருந்து குபுக்கென்று
கொட்டும் குளிர் நீர்
அந்த நீர்த் துளிகள்
தெரிப்பதே ஓர் அழகு
பல் துலக்கும் சாதனம்
பற்பசை அதன் தலையில் இட்டு
வென்பற்களில் தேய்த்து
நுரை தள்ள உமிழ்ந்து
வாய் கொப்பளித்து
கண்ணாடி பார்த்து
முகமுடி சரிசெய்து
ஆடை களைந்து
அகம் துலக்க
தண்ணீர் திறந்து
அது வெந்நீர் ஆகும் வரை
வேடிக்கைப் பார்த்து
விளங்கும் புதிர் தெரியாமல்
வெளிச்சம் பார்த்து
வெந்நீர் தேகம் தொடும் வரை
கால விரயம் ஆகியது
வெந்நீர் வேகமாய்
மேனியில் பரவ
தேகம் சூடேற
சூட்டின் சுகத்தில்
குளிர் மறந்து போனது
வெந்நீரின் வெப்பம் தேகத்தின்
ஒவ்வொரு பாகத்திலும்
படிந்து போனது
கடிகாரம் காலத்தைக் காட்ட
நினைவில் ஓர் சினுங்கல்
துண்டால் உடலை சுருட்ட
ஒத்தி எடுக்க
உடல் மேல் இருந்த
நீர் கொப்பளங்கள் மறைந்தன
சமுதாயத்தை சந்திக்க
சீருடை வேண்டாம்
ஆனால் ஓருடை வேண்டும்
நாடறியும் நாகரீகம்
நாம் அணியும் உடையில் உள்ளது
துவைத்த உடையில்
தண்ணீர் பிழிய
சுருக்கம் வரும்
உலரும்போது சூடு போட்டு
சுருக்கம் தவிர்த்து
சுருங்கிய ஆடை பார்த்தால்
பலர் முகம் சுருங்கும்
மானம் காக்கும் ஆடை கண்டு
மரியாதை செய்யும்
மனிதர் பலருண்டு
மேடை ஏறும் நிலை
வேடம் போட என்ன பிழை
உடலும் மனமும்
ஒருங்கே உழைத்தால்
உயர்வு என்றும்
நம் உடன் உண்டு
உயரும் வழிஉண்டு
இறைவன் துணையோடு
நம்பிக்கை நம் செயலோடு

No comments:

 
software software